4 பேர், ஒரு படம் - ட்விட்டரில் எங்கேயும்,எப்போதும் ஒரு குறிப்பிட்ட படத்தை பற்றி பேசினால், பாபா ஃபர்ஸ்ட் சீனில் வரும் சாமியார்கள் போல் எங்க ஒரு 4 பேருக்கு அலாரம் அடித்துவிடும். அது ரிதம். சங்கமம் முதல் டிவியில் ஹிட்டான படங்கள் என ஒரு வரிசை உண்டு. அதில் முதன்மை இடம் இப்படத்திற்கு. டிஆர்பி கணக்குகள் தெரியவில்லை. ஆனால் வேலையை விட்டுவிட்டு ரிதம் எப்போது போட்டாலும் பார்க்கும் ஒரு sect உண்டு. ஒரு extremely wellmade,moving டிராமா அது. தாரே சமீன் பர்க்கு முன்னால் அழுதது அந்த ‘கார்த்தி சார்’ பையனுக்கு தான்.

நிற்க, நேற்றிரவு 3 பேர், 3 காதல் பார்க்க நேர்ந்தது. தோன்றிய ஒரே கேள்வி “இந்த மனுஷனுக்கு என்னாச்சு?”. மசாலா படமோ, கலைப்படமோ, ஒரு திரைப்படம் முதலில் ரசிகனை engage செய்யவேண்டும். இருட்டில் “சார் படம் போட்டாச்சா” என வரும் ரசிகனோ, வெள்ளி இரவு வீட்டு ஹோம்தியேட்டரில் குழந்தை தூங்கவிட்டு டிவிடி போடும் தம்பதியோ, கையைப்பிடித்து மெல்ல அழைத்துவந்து முதலில் செட்டிலாக விடவேண்டும். இந்த அடிப்படை நேர்த்தியை பேரரசு,ஹரி படங்களில் கூட காணலாம். திரைக்கதை உத்தியோ என்ன எழவோ, காமாசோமாவென ஆரம்பிக்கிறது படம். கண்டுகொண்டேன் ராமு-சோமு எடிட்டிருப்பார்கள் போல, அவ்வளவு ஜெர்க் ஆகிறது. இந்த வடிவேலு ஜோக்குகளில் பல்க்காய்,வழுக்கையாய் ஒருத்தரை பார்த்திருப்பீர்களே..என்ன எழவுக்குன்னே என தெரியாமல் ஆரம்பத்தில் காமெடி போல் 2 காட்சியில் வருகிறார். அவர் யார், என்ன என்ற லீட் காட்சிகள் மிஸ்சிங். அப்புறம், ஒரு நாலு வபா, ஃபேஸ்புக் லவ் ஜோக்சை சிறுசிறு சீன்களாக திணிக்கிறீங்களே, அதெல்லாம் ஏய்நீரொம்பஅழகாஇருக்கேலயே எடுபடல சார்..

அடுத்த பெரிய குறை கேஸ்டிங், குறிப்பாய் விமல்-அவரின் உயர ஹீரோயின். விமல் போன்ற சிறுநகரத்தானை CAவில் ரேன்க்ஹோல்டராக, எழுத்தாளனாக காட்டக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் அதற்கு ஒரு அடிப்படை உடல்மொழி உண்டு. விமல் படுசுத்தம். அதுவும் கடைசியில் ஒரு புக் ரிலீசில் ஒரு ப்ளேசரை மாட்டிக்கொண்டு வரும் காட்சில்லாம், தாமு புன்னகைதேசம் க்ளைமாக்சில் கோட்சூட்டில் வருவதற்கு சமம். அப்புறம், என்ன எழவோ, ஒரு காட்சியில் பேர்பாடியாக வருகிறார்..ஜிம் பக்கமே போகமாட்டார் போல. விமல், நடிப்பு வாழ்க்கையை ரொம்பவும் ஈசியாக எடுத்துக்கறீங்க...U will run out of luck soon. அப்புறம், வசந்த் ‘இளமை நிரம்ப, குறும்பு ததும்ப’ எழுதியதாக நினைத்த விமல் பருப்பு போல் பேசும் ஒவ்வொரு டயலாகும் லேடீஸ் ஹராஸ்மெண்ட் வகை. அதுபோல், முதல் 20 நிமிடங்களுக்கு அந்த ஹீரோயினி பேரழகி என்பது போல் முகம் காட்டாமல் பில்டப் செய்து, அவரை காட்டும்போது ப்ப்ப்பாஆ என இருக்கிறது. அப்புறம் ஊட்டியில் எங்கய்யா இவ்ளோ பெரிய ஹோட்டல் கன்ஸ்ட்ரக்‌ஷன்? இது வசந்த் படம்..இந்த கேள்வியெல்லாம் கேட்போம்.

ரெண்டாவது சேரன்-(தாமிரபரணி) எபிசோட் கொஞ்சம் தேவல..சூழல்,பானுவின் தம்பி எல்லாம் கொஞ்சம் கடல்,நீர்ப்பறவை சாயல். இதிலும் எனக்கு செயற்கையே அதிகம். அதிலும் சுவாரசியம் என வைத்த அந்த நாய்க்கடி எபிசோட் பரமக்கடி. நரேன் என்ற மகாநடிகன் உசுரைக்கொடுத்து நடிக்கும் அந்த 10 நிமிடங்கள் மட்டுமே, இந்த மொத்தப்படத்தில் saving grace. பொண்ணப்பெத்தவன் என்பதாலோ என்னவோ, ரொம்பவும் பிடித்தது. தர்மபுரி இருக்கும் தமிழ்நாட்டில் எங்கய்யா இந்த ஊரு? ஒருத்தன் ஒரு பொண்ணு வீட்டுக்கு வர்றான், எங்கபார்த்தாலும் பேசுறான், ஊர் ‘குணா சார்’ என வெள்ளந்தியாய் மிக்சர் சாப்பிடுகிறது.

கடைசி, அர்ஜூன் - நீச்சல்பெண் எபிசோட் மிக செயற்கை. “ஆடியன்ஸ் இந்த இடத்துல கை தட்டுவான் சார்” என வைத்த ஒவ்வொரு காட்சியும் பல்லிளிக்கிறது. ப்ச், இந்த கோச்-ஸ்டூடண்ட் காதலே என் போன்ற எய்ட்டீஸ் ஆட்களுக்கு அவ்வளவு சிலாக்கியமில்லை.

படத்தில் 2 பாசிடிவ்கள்.. ஒன்று யுவன். இன்னொன்று காமெரா (எவன்(ர்))? பாடல்களும்,ஷாட்களும் கண்ணில் ஒற்றிக்கொள்ளூம் தரம்.

வசந்த், போதும். தமிழ்ச்சினிமாவில் எப்போது டாப் 10 லிஸ்ட் போட்டாலும் அதில் கேளடி கண்மணி, ரிதம் வரும் (என் லிஸ்டிலாவது). பேரை கெடுத்துக் கொள்ளாதீர்கள், அதுவும் அடுத்தவர் பணத்தில். ஜீவி ஒருவர் போனது பத்தாதா?

இன்னொன்று, ரித்விக்கை ஏதும் காமெரா, டைரக்‌ஷன் என க்ராஃப்ட் பக்கம் தள்ளிவிடுங்கள். இன்னொரு மனோஜாய் ஆக்காதீர்கள்.

Reply · Report Post