Lakshmanan.P · @laksh_kgm
20th Sep 2013 from TwitLonger
"மருத்துவர் அமைதியாகச் சொன்னார்: இனி வைத்திருந்து பிரயோஜனம் இல்ல. பல்ஸ் ரொம்ப இறங்கிட்டுது"
"வீட்டுக்கு கொண்டு போயிடலாமா, டாக்டர்?"
"ஆமாம்; அதுதான் நல்லது. சொல்ல முடியலைனாலும் , அவரும் அதைதான் விரும்புவார்!"
"செல்லப்பா, குமாரசாமியைக் கூப்பிடு" தன் மகனிடம் கூறினார் கருப்பணசாமி. தனது பெரியப்பா மகன் குமாரசமியோடு உள்ளே வந்தான், செல்லப்பன்.
"அண்ணன் இனி பிழைக்க மாட்டார்; வீட்டுக்கு கொண்டு போயிடுவோம். அவர் கட்டி வாழ்ந்த வீட்டிலேயே உயிர் பிரியட்டும்; என்ன சொல்ற?"
அவனுக்குப் பின்னால் நின்றிருந்த குமாரசாமியின் மனைவி, அவனை வெளியே அழைத்தாள். யதார்த்தமாக செல்லப்பனும் பின்னால் சென்றான்.
"ஏங்க! மாமா ரெண்டு நாளைக்கு இங்கேயே இருக்கட்டும். அங்கே போனா நமக்கு சிரமம். போனதும் எடுத்திட்டுப் போயிடலாம்.இல்லைனா ரெண்டு மூணு நாள் படுக்கையில் கிடந்தா, அவர் படுற சிரமத்தை விட நாம் அதிகமா படணும், என்னால ஆகாது சாமி."
டெல்லிக்கு அருகே, நொய்டாவில், வெளிநாட்டுக் கம்பெனி ஒன்றில் பெரிய வேலை இவனுக்கு. வருடம் ஒரு முறை தங்கள் கிராமத்துக்கு வந்து செல்வது அவர்களின் வழக்கம்.
பெரியவர், பெரியணசாமி தன் மனைவியை இழந்த பின் தம்பி வீட்டில்தான் வாழ்கிறார்.
கேட்டுக் கொண்டிருந்த செல்லப்பன் உள்ளே சென்று தந்தையிடம் விபரத்தை சொன்னான்.
வேகமாக வெளியே வந்த கருப்பணசாமி, அண்ணன் மருமகளிடம் சொன்னார்: உங்க வீட்டை சுத்தம் செய்து வச்சிருக்கிறேன். அதுல தங்கிக்குங்க. பெரியவர் போகும் வரை யாரும் எங்க வீட்டுக்கு வரவேண்டாம். அண்ணனை எங்க வீட்டு முன்னால அறையில கொண்டு பொய் வச்சுக்கிறோம் என்று சொல்லிவிட்டு,
"செல்லப்பா, ஆம்புலன்ச வரச்சொல்லு." என்றார் உரத்த குரலில்.