# படித்ததில் பிடித்தது #
(சிரிக்காமல் படிக்கவும்)
அன்பே,

நீ சொன்னாய்
என்பதற்காகத்தான் உனது
அப்பாவிடம்
பேசிப்பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன்.

"அலுவலகத்தில் இருக்கிறேன்,
நீல்கிரீஸில் சாயங்காலம்
சந்திக்கலாம்" என உன்
தகப்பன் தொலைபேசியில்
சொன்னபோது கடமை
தவறாதவனின் மகளைத்தான்
காதலித்திருக்கிறோம் என
இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து
மணிக்கெல்லாம் வந்து
அமர்ந்த உனது
தகப்பனை பார்த்தபோது
"எருமை மாட்டிற்கு
மான்குட்டி எப்படி பிறந்தது?"
என்ற பழைய கவிதை
நினைவிற்கு வந்தது.

மான்குட்டி என்ற வர்ணனை
உனக்கு அதிகபட்சந்தான்
என்றாலும்
எருமை மாடு என்பது உனது தகப்பனுக்கு
குறைந்தபட்சமே.

அந்தக் கடையில்
பில்போடுவதற்கு இருந்த
கம்ப்யூட்டரைத் தவிர
மீதம் இருந்த அனைத்தையும்
தின்று தீர்த்துவிடும்
பொறி அவரது கண்களில்
மின்னியதை நான் கவனிக்க
தவறிவிட்டேன்.

சரி எதையாவது
சாப்பிட்டுவிட்டு பேச்சைத்
துவங்கலாம் என சர்வரை
அழைத்தேன்.

அதற்குப் பின் உனது
அப்பனின் கைங்கர்யத்தால்
சமையல்கட்டிற்கும்
டேபிளுக்கும் இடையே
சுமார் ஐம்பது முறை
ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

ராயப்பாஸிலும், தலப்பாகட்டி ஹோட்டலிலும்
நீ புஃல் கட்டு கட்டுவது
ஒரு ஜெனடிக் பிரச்சினை
என்பதை கண்டுகொண்டேன்.

வேழ முகம்தான் இல்லையே
தவிர பேழையாவது இருக்கிறது
உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை
முடிவுக்கு கொண்டுவர
இயலாதவனாக கையறு
நிலையில் இருந்தபோது
"தம்பி இப்பெல்லாம்
முன்ன மாதிரி
சாப்பிடமுடியறதில்லப்பா...
வயசாயிடுச்சில்ல..."
என தன் திருவாய் மலர்ந்தார்.

திடப்பொருளிலிருந்து
ரோஸ்மில்க் போன்ற
திரவப்பொருளுக்கு மாறினார்.
அப்பாடா,
முடித்துவிட்டார்
என்ற ஆசுவாசத்தை
'ஒரு கஸாட்டா' என்ற
வார்த்தையில் உடைத்தார்.

கஸாட்டாவும், ஜர்தா பீடாவும்
சாப்பிடுவதில்லை­ என்பதைத்தவிர
திருச்செந்தூர் கோவிலில்
உண்டைக்கட்டிற்க­ு
காத்திருக்கும் கோவில்யானைக்கும­்
உனது அப்பனுக்கும்
ஆறு வித்தியாசமே இல்லை.

"தம்பி எப்ப சாப்பிட்டாலும்
கடைசியா ஒரு ஐஸ்கிரீம்
சாப்பிடுவது நல்லதுபா"
என்ற அவரது கடைசி
கூற்றில் இருந்த
'கடைசியா' எனும்
வார்த்தைதான் என்
வாழ்வின் மீது நம்பிக்கையை
ஏற்படுத்தியது.

"சார், நான் உங்க
பொண்ண விரும்புகிறேன்,
அவளையே கல்யாணம்
பண்ணிக்க ஆசைப்படுகிறேன்
அது விஷயமா பேசத்தான்
உங்களுக்கு போன் பண்ணினேன்"
என்று மெல்ல பேச்சைத்
துவங்கினேன்.

"அப்ப போன வாரம் இதே
விஷயமா பேச
ஆனந்தபவனுக்கு வந்தது
நீங்க இல்லையா தம்பி"
என ஆச்சர்யமாக அவர்
கேட்ட போதுதான்,
மொத்தக் குடும்பமும்
இரை எடுப்பதற்கென்றே
எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல்
டச்சோடு
செய்கிறீர்கள் என்பதை
உணர்ந்தேன்.

"தம்பி இது பெரிய விஷயம்...
ஒரு நாளில் பேசித்
தீர்த்திட முடியாது,
அதனால நீங்க ஒன்னு
பண்ணுங்க...நாளை­க்கு
அன்னபூர்ணா ஹோட்டலுக்கு
வந்திடுங்க...அங­்க
பேசிக்கலாம்" என்ற
உனது தகப்பனை
கொலை செய்ய அந்த
நேரம் துப்பாக்கி
இல்லாமல் போனது
துர்பாக்கியமே.

இப்படிக்கு
இரைதேடும் குடும்பத்திற்கு
இரையாகி விடாமல்
இறையருளால் தப்பித்த
உன்னுடைய,
முன்னாள் காதலன்.

(தேவகோட்டை சுப்பையா இலக்கண நயத்தோட எழுதியது)

Reply · Report Post