கேமராவில் எழுதிய கவிதை - பைரவா பாடல்


விஜய் நடிக்கும் 60ஆவது படம் ‘பைரவா’. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இயக்குநர் பரதன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன். இப்படத்தில் என் நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு காதல் பாடல் இடம்பெறுகிறது. அது கவிதையில் நனைந்திருக்கிறது.

ஒரு திருமண மண்டபத்தில் முதல் முதலாய் கீர்த்தி சுரேஷைப் பார்க்கிறார் நாயகன் விஜய். அவர் ஊர் தெரியாது; பேர் தெரியாது. ஆனால் அந்த அழகில் மனம் சொக்கிப் போகிறது. பசுவின் பின்னால் போகும் கன்றுபோல் கீர்த்தி சுரேஷின் பின்னால் விஜய் அலைந்து அலைந்து பாடும் பாடல் இது. கவிதையின் சாயல் கொண்ட இந்தப் பாடலைக் கவிதைபோல் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் பரதனைக் கேட்டுக்கொண்டேன். பாடல் படமாக்கப்பட்டதும் என் வீட்டுக்கே வந்து போட்டுக்காட்டினார் இயக்குநர் பரதன். இது ‘கேமராவில் எழுதிய கவிதை’ என்று அவரைப் பாராட்டினேன்.

இசை வரும் முன்னே; தமிழ் வரும் பின்னே. இதோ லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அந்த வரிகளை வாசிக்க வழங்குகிறேன். இசையோடு கேட்க இன்னும் சில வாரங்கள் காத்திருங்கள்...

மஞ்சள் மேகம் – ஒரு
மஞ்சள் மேகம் – சிறு
பெண்ணாகி முன்னே போகும்

பதறும் உடலும் – என்
கதறும் உயிரும் – அவள்
பேர்கேட்டுப் பின்னே போகும்

செல்லப் பூவே – நான்
உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய் – உயிர்
சிதறக் கண்டேன்

நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன

*

கனவா கனவா – நான்
காண்பது கனவா – என்
கண்முன்னே கடவுள் துகளா

காற்றின் உடலா – கம்பன்
கவிதை மடலா – இவள்
தென்னாட்டின் நான்காம் கடலா

சிலிக்கான் சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ
வெளியூர் நிலவோ

நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன

*

செம்பொன் சிலையோ – இவள்
ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ – இவள்
பெண்பால் வெயிலோ

நான் உன்னைப் போன்ற
பெண்ணைக் கண்டதில்லை
என் உயிரில் பாதி
யாரும் கொன்றதில்லை

முன்னழகால் முட்டி
மோட்சம் கொடு – இல்லை
பின் முடியால்
என்னைத் தூக்கிலிடு

Reply · Report Post