ஒரு வியாபாரியின் மீதான தாக்குதல் ஒரு குடும்பத்தின் மீதான தாக்குதல்


ஜனவரி 1 வந்தா ஆட்டு புழுக்கை போட்டா ஆப்பிளா விழும், குழம்பு சட்டிக்குள்ள கை விட்டா கல்கண்டா வரும்னு கதை கதையா விடுறதை நம்பி குந்த வச்சு காத்திருக்கிறவனெல்லாம் எப்படியும் கம்பி Gateடை தாவி குதிக்கிறப்ப குதிங்கால் குத்துன மாதிரி கண்ணுல தண்ணி வர பொத்துனாப்ல இருக்கப்போறானுங்க. ஆனா நமக்கு? இனப்படுகொலைக்கு ஈடாக, அன்னைக்கு சம்பாதித்ததை அன்னைக்கே அழித்து முடிக்கும், ரேஷன் அரிசிக்கும் மாச கடைசிக்கு கணக்குப்போட்டு வாழும், கூலி வாங்கும் சனிக்கிழமையை வாரத்தின் முதல் நாளாய் நம்பியிருக்கும், மலேரியா காய்ச்சலுக்கும் மாரியம்மன் மேல பாரத்தை போடும், மளிகை கடைகளில் இன்னமும் பிதுக்கிற பேஸ்ட்ல இருந்து கரைக்கிற புளி வரைக்கும் 50கிராம் பொட்டலங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும், ஒரு பாவப்பட்ட இனத்தின் மீது, ஒரு பணப்படுகொலையை நடத்தியிருக்கிறார்கள், அதை நாள்தோறும் நியாப்படுத்திக்கொண்டும் நேர்மைப்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள், இருப்பார்கள்.

கார்த்திகை மார்கழி மாசங்களில் செகண்ட் ஷோ சினிமா விட்டு வரும் நள்ளிரவு நேரங்கள்ல நாய்கள் தான் தெருவுல சுத்திக்கிட்டு இருக்கும், இப்பலாம் சர்க்கரை டப்பா, புடவை மடிப்பு, பழைய புத்தகம், சாமி போட்டோவுக்கு பின்னாடின்னு கருப்பு பணத்தை சேர்த்தி வச்ச கருப்புப்பண களவாணிகள் எல்லாம் ஏடிஎம்கள் தேடி சுத்திக்கிட்டு இருக்கிறத தான் பார்க்க முடியுது. நேத்து திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் பக்கத்துல இருக்கும் ஓவர் ப்ரிட்ஜ் ஸ்டேட் பேங்க்ல நின்னவங்க மட்டும் ஒரு 600 பேர் இருப்பாங்க. இப்பவும் அங்க கும்பல் இருக்கும், யாராவது போய் போட்டோ எடுத்து போட்டாக்கூட போடலாம். கேஷுவல் லீவ், மெடிக்கல் லீவ் மாதிரி காசு எடுக்க லீவ்ன்னு ஒன்னை உருவாக்கிய பெருமை இந்த அரசாங்கத்திற்கு தான் சேரும். பல தனியார் பள்ளி ஆசிரியைகள், தனியார் நிறுவன ஊழியர்கள், பல ஊழியர்களின் குடும்பத்தினர் வங்கிகளில் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க லைன்ல நிறுத்துப்பட்டிருப்பதை நானே பார்த்திருக்கிறேன். ஒரு ஏடிஎம்ல பணமெடுக்க ஒன்பது ராஜா சார் பாட்டு ஆகுது. இதுல மாவீரன் நெப்போலியன் காத்துல இருந்து மடோனா செபாஸ்டியன் காலம் வரை, வரலாற்றுல, தங்களது பணத்தை எடுக்க தடியடி வாங்கிய ஒரே தலைமுறை நாமளா தான் இருக்கும், சொந்த காசே நொந்த காசானது நமக்கு மட்டும் தான். காலையில பேங்குக்கு பணமெடுக்க கும்கி லட்சுமிமேனன் மாதிரி கிளம்பிப்போனவனெல்லாம் சாயந்திரம் ரெக்கை லட்சுமிமேனன் மாதிரி வீங்கி போய் வாரான். பரம்பரை பரம்பரையா பாட்டில் தண்ணி வாங்கி சரக்கடிச்சவனுங்க எல்லாம் இன்னைக்கு பாக்கெட் தண்ணி வாங்க கூட சில்லறை இல்லாம சிங்கியடிக்கிறாங்க.

வாரம் 24000 எடுத்துக்கலாம்னு சொன்னாலும், 90% பேங்குகளில் பணமே இல்ல. வருஷம் 5000 கோடிக்கு ஏற்றுமதி மட்டுமே செய்யும் எங்கள் நகரத்திற்கு, வாரத்துக்கு நாற்பது லட்சம் முதல் எண்பது லட்சம் வரை தான் பணமே வருது. பணத்தை கூட பிச்சைப்போடுற மாதிரி ரேஷன்ல வழங்கிக்கிட்டு இருக்காங்க. நகரங்களில் பெரும்பாலான ஏடிஎம்களிலும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளிலும் சமீப கால படங்களில் பாடல்காட்சிகளில் தாமன்னா டிரஸிலும் ஒண்ணுமே இல்லை. பேங்குல இருக்க வேண்டிய பணமெல்லாம் பணக்காரனுங்க பெட்ரூம்லயும் பாத்ரூம்லையும் எடுக்கிறாங்க, அவனுங்களை வெளுக்கிறதை விட்டுட்டு, கால் கடுக்க கடுப்புல துட்டு எடுக்க நிற்கிறவனுக்கு லட்டு கொடுத்துக்கிட்டு இருக்கானுங்க லூசுங்க, இவனுங்க தேர்ந்தெடுத்த முதலாளிகளிடம் கையாலாகாததனத்தை விட வேற எதை எதிர்பார்க்க முடியும்? மறைந்த முதல்வருக்காக அஞ்சலி செலுத்தக்கூட அரைநாள் தான் கடைகளையே மூடுனாங்க. திறந்து வைக்கிற நாளுலையே வியாபாரம் குருடாயிலை குடிச்ச மாதிரி இருக்கு, இதுல மூணு நாள் மூடி வச்ச மொத்தமா பிசினெஸ் பாலிடாயில குடிச்சுட்டு படுத்துக்கும் என்ற கவலை தான். அஞ்சலி இடுப்பு பல மடிப்புகளோட மாதிரி இருந்த பணப்புழக்கம் இப்போ இலியானா இடுப்ப இஸ்திரி போட்ட மாதிரி தட்டயா கிடக்கு. மொத்த பணப்புழக்கமே பேலியோ டயட் பாலோ பண்ணின மாதிரி இருக்கு.

இந்த ஒரு மாசத்துல இந்தியா முழுக்க ஒத்திவைக்கப்பட்ட கல்யாணங்களும் விஷேஷ நிகழ்வுகளும் பல லட்சத்துக்கும் மேலிருக்கும். அதன் பின்னிருப்பது ஒன்று தான், நம்பிக்கை. " I Promise to pay the bearer the sum of one thousand rupees'ன்னு சத்தியம் பண்ணி கையெழுத்து போட்டு ரிசர்வ் வங்கி சீல் வச்சு மக்களுக்கு கொடுத்த நோட்டுக்களை, திரும்ப எடுத்துக்கலாம் என்றே அதே நம்பிக்கையில் தான் மக்கள் வங்கிகளில் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்கள். இப்ப அரசாங்கம் நோட்டடிக்க லேட்டாகும், பேப்பர் தீர்ந்து போச்சு, மாமியார் வயசுக்கு வந்துட்டா, மச்சினிச்சி செத்துப்போயிட்டான்னு கலர் கலரா ரீல் விட்டுக்கிட்டு கேஷ்லெஸ்ஸா போ, டாப்லெஸ்ஸா போன்னு சொல்றதும், எந்த முன்னேற்பாடும் இல்லாம மக்களை மாசக்கணக்குல வச்சு செய்யறதும் கையாலாகதத்தனம். பூப்படையா பெண்ணை கட்டிவைத்து புள்ளை பெத்து தர சொல்றது தான் இப்ப நம்ம நாடு இருக்கிற நிலைமைல கேஷ்லெஸ் எகானாமி. பொதுமக்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடும் சீட்டு கம்பெனிகளுக்கும், இப்ப போட்ட பணத்துக்கு மாற்று பணம் கொடுக்கக்கூட நிலையில்லாத ரிசர்வ் வங்கிக்கும் பெரிய வித்தியாசமில்லை.

அந்தப்பக்கம் போறப்பவெல்லாம் எனக்காக தாராளமா சிரிப்பை செலவு பண்ற நல்ல மனுஷன் அந்த இளநீர் கடைக்காரர். 40 ரூபாயை பணமாத்தான் வாங்குவார் அவர். கடன்ல கொள்முதல் பண்ற அவரால ஸ்வைப் பண்ற மெஷினெல்லாம் வாங்கி வச்சு வியாபாரம் பண்ணி ஜெயிக்க முடியுமான்னு தெரில. நாங்க கேட்காமாலையே செவ்வாய்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மிளகுதக்காளி கீரையை வீட்டு படிக்கட்டில் வச்சுட்டு போயிடுவாங்க ஒரு ஆயா. சனிக்கிழமை மொத்தமா பணமா வாங்கிக்குவாங்க. இனி பேடிஎம்ல தான் பே பண்ணுவேன்னு சொன்னா அவங்களுக்கு என்ன புரியும்னு தெரில. நன்றாக கவனித்து பார்த்தா, ஒவ்வொரு சிறு நகரங்களின் பஸ்ஸ்டாண்ட் சுற்றியோ, பிரதான சாலையிலோ சின்ன சின்னதா காய்கறி முதல் மலிவு விலை பொருட்கள் விற்கும் கடைகள் இந்த ரெண்டு மூணு வருஷத்துல அதிகமா மொளைச்சிருக்கும். மதியத்துக்கு மேல தான் கடை திறப்பாங்க. சாயந்திரம் வேலை விட்டு போறவங்க தான் அவங்க டார்கெட். அவர்களில் பாதி பேருக்கு மேல் இந்த தொழில் லாபம் சம்பாதிக்க வரவில்லை, மற்ற எல்லா தொழில்கள் செய்தும் தோற்றுப்போய் கடைசி முயற்சியாக இதை செய்பவர்கள். இது ரெண்டும் உதாரணம் தான். கேஷ்லெஸ் எகானமி கொண்டு வரேன்னு இப்படிப்பட்ட வியாபாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல், அவர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது அவரை நம்பியிருக்கும் ஒரு குடும்பத்தின் மீது ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட தாக்குதல். எப்பா பழனி, இப்படி சாமானிய மக்கள் எல்லாத்தையும் சமாதிக்கு அனுப்பிவிட்டுட்டு, யாரு பார்க்கப்பா போட்டோவுக்கு போஸ் கொடுப்ப? கருப்பு பணத்தின் மீதான துல்லிய தாக்குதல்ன்னு ஆரமிச்சு கள்ளநோட்டின் மீது மெல்லிய தாக்குதல்ன்னு முக்குவன் எல்லாம் இப்ப கேஷ்லெஸ் எக்கனாமிடா முனகிக்கிட்டு இருக்கானுங்க. கார்டுல இருக்கும் பலாக்காயை விட கைல இருக்கும் கலாக்காய் எவ்வளவு முக்கியமென முந்தாநேத்து வந்த வர்தா புயல் தான் பொட்டுல அடிச்சு சொல்லிட்டு போயிடுச்சே.

மொத்த சொத்துக்களில் 90 சதவிகிதத்தை மொத்த மக்கள்தொகையில் வெறும் 1 சதவிகிதம் பேர் மட்டுமே வைத்திருக்கும், பொருளாதார சமனில்லாத ஒரு வளரும் நாட்டில், புழக்கத்தில் இருக்கும் வித வித மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களில் 90% நோட்டுக்களான 500 & 1000த்தை செல்லாதுன்னு ஒரு முன்னேற்பாடும் இல்லாம சொல்றதே முட்டாள்தனம்ன்னா, அதுலயும் சரவணபவன்காரனுங்க செய்யவேண்டிய ஒரு விஷயத்தை கையேந்திபவன்காரங்க மேல திணிப்பது இருக்கே அதுக்கு பேரு வேற. ஊருக்குள்ள ஒன்பது இடத்துல இருக்கிற சரவணபவன்களையும் ஊர்முழுக்க இருக்கிற கையேந்திபவன்களும் ஒரே தராசுல வச்சு பார்க்கலாமா?

பணக்கார நாடுகளில் கூட கேஷ்லெஸ் எகானமி இன்னமும் 100% சாத்தியப்படுல. இதுல கள்ளப்பணத்தை ஒழிக்க, கருப்பணத்தை ஒழிக்கன்னு ஆரம்பிச்சு தீவிரவாதத்தை ஒழிக்க, ரொக்க பண பரிவர்த்தனையை ஒழிக்கன்னு காரணம் மாறிக்கிட்டே போய்க்கிட்டு இருக்கு. சொப்பனசுந்தரிய கூட இத்தனை பேரு வச்சிருந்தாங்களான்னு தெரியல, ஆனா இவங்க இந்த பணமாற்றத்துக்கு காரணத்தை பிரதமர் முதற்கொண்டு நிதியமைச்சர், ரிசர்வ் வாங்கி கவர்னர், துணை கவர்னர்ன்னு பலரும் ஆளுக்கொண்ணு வச்சிருக்காங்க. ஏடிஎம்ல பணமெடுக்க போய், ஆஸ்பத்திரிக்கு பணமில்லாம, போதாக்குறைக்கு வங்கி ஊழியர்களுன்னு செத்துப்போனவங்க எண்ணிக்கையை பார்த்தா, அரசாங்கம் பணமாற்ற நடவடிக்கை மக்கள் தொகையை குறைக்கண்ணு சொன்னாலும் ஆச்சரியமில்லை. ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு கூட்டிக்கிட்டு போறதை விட்டுட்டு இவங்க தோல்வியை மறைக்க நம்ம காலை புடிச்சு தரதரன்னு இழுத்துக்கிட்டு போறாங்க. இந்த ஒன்னரை மாசமா நாம விரும்புனாலும் விரும்பாட்டியும் அரசாங்கத்தின் எண்ணங்கள் நம்ம மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது, நாமளும் அதை ஏற்கவும் பழக்கிட்டோம். கேஷ்லெஸ் எக்கனாமிக்கு மாறு மாறுன்னு அரசாங்கம் நிர்பந்திப்பது, உண்மையில் சிறு சிறு வியாபாரிகளுக்கும் பெரும் மூலதனக்காரர்களுக்கும் போட்டியை தான் மறைமுகமா ஊக்குவிக்கிறது. இதுல யாரு ஜெயிப்பாங்கன்னு எல்லோர்க்கும் நிச்சயமா தெரியும். தகுதியுள்ளவை தப்பி பிழைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த சாமானிய மக்களையும் அந்த போட்டிக்கு தயார் செய்துட்டு வந்திருந்தா ஒரு நியாயம் இருந்திருக்கும்.

இந்த பணமாற்றம் அறிவித்த பிறகு பிரதமர் மூன்று கூட்டங்களில் பேசியிருக்காருன்னு நினைக்கிறேன். அந்த மூணு கூட்டங்களிலும் மேடை போட்டவங்கள்ல ஆரம்பித்து மைக் செட் கட்டுனவங்க வரைக்கும், அதில் ஈடுப்பட்ட எல்லா தொழிலாளர்களுக்கும் கூலி ரொக்கமாய் கொடுக்கப்பட்டதா இல்லை கார்டுல ஸ்வைப் பண்ணிக்கிட்டாங்களா? நாமக்கல் பண்ணையில் குஞ்சு பொறிக்கப்பட்ட போண்டா கோழி மாணவனாட்டம், எல்லா இடங்களிலும் மனப்பாடம் பண்ணியதை பீரங்கியாய் முழங்கும் பிரதமர் பெரும் மெஜாரிட்டி வைத்திருந்தும் பாராளுமன்ற பக்கம் விவாதம் செய்ய வரமாட்டேங்கிறார். ஆனா டிசம்பர் 30 அன்னைக்கு சாயந்திரமா தூர்தர்ஷன்ல தோன்றி நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் நன்றின்னு சீரியல் ஓட்ட கரெக்ட்டா கண்ணீர் சிந்திக்கிட்டு வந்திடுவார். ஓசில ஆறுமாசம் பேசிக்கலாம்னு சொன்னதுக்காக சிம் வாங்க எவன்னே தெரியாம எதுக்குனே கேட்காம, கைநாட்டு வச்சு சிம் வாங்குற கிறுக்கு பயலுக தானே நாம? எப்படியும் பிரதமர் கண்ணை கசக்குறதை பார்த்துட்டு அடுத்து சொல்றதுக்கு கையை கட்டிக்கிட்டு எப்படியும் நம்ம அக்கவுண்ட்ல 15லட்சம் போடுவாங்கன்னு நிற்கப்போறோம். அப்படியே எதுவும் கேட்காம நின்னுக்கிட்டே இருந்தா, எப்படியும் 2030 வருஷம் நடுநிலைப்பள்ளி சிலபஸ்ல, 'இந்தியா ஒரு ஜனநாயக சர்வாதிகார மதசார்புள்ள குடியரசு நாடுன்னு' குழப்ப கும்மியடிக்க டால்கம் பவுடர் பூசிவிட்ட தாஜ்மகால் போல பிரகாசமா வாய்ப்பிருக்கு.

- இந்த வார குங்குமத்தில் ( நன்றி குங்குமம் )

Reply · Report Post