skpkaruna

SKP KARUNA · @skpkaruna

2nd Sep 2017 from TwitLonger

தூக்கம் தொலைத்த ஓர் இரவு



எங்கள் வீட்டுப் பெண் ஒருவர் இறந்ததைப் போன்றதொரு அதிர்ச்சி! எத்தனை முறை அழுதுத் தீர்த்தாலும் கண்களில் கண்ணீர் நிறைந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களின் வாழ்வில் இனி என்றுமே கடந்து செல்ல முடியாத மரணமாக இது நிலை பெற்று விட்டது.

நீட் தேர்வை எதிர்த்தவர்கள், அதை ஆதரித்தவர்கள், அது யாருக்கோவான பிரச்சனை என்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள், கடைசி கணம் வரை நம்பிக்கை வாக்குறுதிகளை அளித்து பிள்ளைகளின் முதுகில் கத்தியை சொருகியவர்கள் என எல்லோர் முகங்களிலும் ரத்தக்கறைப் பூசி சென்றிருக்கிறாள் அனிதா.

அந்த மதிப்பெண் சான்றிதழைப் பார்த்தால் வயிறு எரிகிறது! நம் வீட்டில் இப்படியொரு மதிப்பெண் சான்றிதழ் இருக்காதா என ஒவ்வொருவரையும் ஏங்க வைக்கும் சான்றிதழ் அது! அரியலூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்து தன்னந்தனியாக போராடி அந்தச் சாதனையை செய்து காட்டியிருக்கிறாள்.

"இதுதான் நிதர்சனம்! எங்களால் உங்களுக்கான நியாயத்தை வாங்கித் தர முடியவில்லை. மன்னித்து விடுங்கள்" என வெளிப்படையாக இந்த அரசும், அமைச்சர்களும் சொல்லி விட்டிருந்தால் இந்தப் பெண் தனது மனதை திடப்படுத்திக் கொண்டிருப்பாள்.

கடைசி வரை, நீட் தேர்வு இல்லை! இல்லை! என சொல்லியே ஏமாற்றினார்கள்.

பிறகு, நீட் அடிப்படையில் அட்மிஷன் இருக்காது! இருக்காது! என சொல்லி சொல்லி கனவுகளை விதைத்தார்கள்.

இறுதியாக, இந்த ஆண்டு நீட் தேர்வு விலக்கு தருவதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டு விட்டது. மாணவர்கள் கவலை படவேண்டாம் என டெல்லியிலிருந்து மத்திய அமைச்சரை விட்டே சொல்லச் சொல்லி நம்பிக்கை அளித்தார்கள்.

கடைசிக் கணம் வரை இழுத்துச் சென்று, தொலைக்காட்சிகளில் பொய் வாக்குறுதிகளைத் தெரிந்தே அளித்து, உச்ச நீதிமன்றத்தில் அதற்கு மாறான மனுவை தாக்கல் செய்து நம் பிள்ளைகளின் முதுகில் கத்தியை சொருகியதில் அனிதா எப்போதோ செத்துப் போனாள்.

மெடிக்கல் சீட் கிடைக்க வில்லையென்றால் என்ன? கால்நடை மருத்துவம் படிக்கலாமே! இன்ஜினியரிங் படிக்கலாமே! அக்ரி படிக்கலாமே! என்கின்றனர்.

ஒரு சீட் கிடைக்காதையே தாங்கிக் கொள்ள முடியாத இந்தப் பெண் நாளை டாக்டராகி என்ன சாதிக்கப் போகிறாள்? இவளை நம்பி எப்படி மருத்துவம் பார்த்துக் கொள்வது? என்றெல்லாம் சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

இவர்களால் தாங்க முடியவில்லை.

சொந்தமாக ஹாஸ்பிடல் வைத்துக் கொண்டு,
கணவனும்,மனைவியும் 24 மணி நேரமும் ப்ராக்டிஸ் செய்து கொண்டு,
தங்கள் மகனை/மகளை மருத்துவப் படிப்புக்கான கனவுடனே வளர்த்து,
அதற்கேற்ற உயர்தர கல்வி, டியூஷன், கோச்சிங் அளித்து,
தேர்வு மையத்தில் இருக்கை எங்கே? யார் சூப்ரவைசர்? என்பது முதல் ஆராய்ச்சி செய்து,
நீட் தேர்வா! அதற்கு கேரளாவில் கோச்சிங் நன்றாக இருக்காமே! என பல லட்சம் செலவு செய்து அனுப்பி அங்கே படிக்க வைத்து,
இறுதியில் மார்க் வரும்போது தங்கள் பிள்ளை ஜஸ்ட் பாஸ் ஆகி இருப்பதைக் கண்டு வெதும்பிப் போய்,
பிறகு நமக்கென்ன குறைச்சல்? ஃபிலிப்பைன்ஸ்லே மெடிகல் காலேஜ் இருக்காம்! அங்கே போய் படி என கோடிகளை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு,
அங்கிருந்து திரும்பி வந்தவுடன்,
ஏதோ மெடிகல் கவுன்சில் தகுதித் தேர்வாமே! பத்து லட்சம் தந்தால் பாஸாக்கி விட்டுருவாங்களாமே! என ஆளைப் பிடித்து தங்கள் பிள்ளைகளை டாக்டராக்கும் இவர்களால்.......

அரியலூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் ஓட்டு வீட்டிலிருந்து கொண்டு தனக்குத் தானே கனவுகளை விதைத்துக் கொண்டு. தன்னந்தனியாகப் படித்து, மொத்த மதிப்பெண் எத்தனை? 200 தானே! இதோ 200/200, என எடுத்துக் கொண்டு எங்கே எனது சீட்? என கம்பீரமாக நடந்து வந்த ஏழைப் பெண்ணின் வெளிச்சத்தை இவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

எனவேதான், நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என சொல்லிவிட்டு எண்பதாவது மீட்டரில் அதை 200 மீட்டர் பந்தயம் எனவும், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயம் என தொடங்கிவிட்டு, அது 100 மீட்டர் ரேஸாச்சே! எப்பவோ முடிஞ்சு போச்சே! எனவும் விதிகளை தங்கள் விருப்பத்துக்கு மாற்றியமைக்கின்றனர்.

கல்வியைத் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என எஸ்.வி.சேகர்கள் தங்கள் பூணூலை இழுத்து விட்டுக் கொண்டு உபதேசிக்கின்றனர்! மற்ற எல்லோரையும் போல நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஏரி வேலைக்குச் செல்வதுதானே உங்கள் 'கல்வியைத் தாண்டிய வேலை?'

அதையெல்லாம் மீறி, தனது ஒடுக்கப்பட்ட பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் இல்லாமல் தனது அபார மதிப்பெண்கள் மூலம் பொதுப்பிரிவில் உங்கள் பிள்ளைகளின் இடத்தை சொடக்குப் போட்டுக் கேட்ட அனிதாவின் அந்த கம்பீரம்தானே உங்களை அச்சுறுத்துகிறது?

எகிப்தில் பிரமிடுகளைக் கட்டிய பல லட்சம் அடிமைகளை சவுக்கால் அடித்து வேலை வாங்கியவர்களும் அடிமைகளே! பாரோ மன்னர்களுக்கு இப்படிப்பட்ட விசுவாசமுள்ள அடிமைகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமி, எடப்பாடி, ஓபிஎஸ், விஜயபாஸ்கர் என தோண்ட தோண்ட அவர்களுக்கு அடிமைகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எஜமான விசுவாசத்துக்காகவும், பதவிக்காகவும் இவர்கள் தம் ரத்த சொந்தங்களைக் கூட சவுக்கால் அடிக்கத் தயங்குவதே இல்லை.

பதவிக்கும், அதிகாரத்திற்கும் வெறிப்பிடித்து அலையும் அதிகாரவர்க்கம்,
ஆறு ஆண்டுகளாக பாடத்திட்டங்களை நவீனப்படுத்தாத கல்வித்துறை,
வெறும் மதிப்பெண் தொழிற்சாலைகளாக நடத்தப்பட்ட தனியார் பள்ளிகள்,
சமச்சீர் கல்வி தரம் குறைந்ததாமே! என பிதற்றித் திரிந்த நீங்கள்,
சி.பி.எஸ்.சியிலே படிச்சாதான் இனிமே வேல்யூ என உளறிய நாங்கள்..
என நாம் அத்தனைப் பேருமே இன்று குற்றவாளிகள்.

சற்றும் சொரணயற்ற இந்த மக்களின் மனதில் அக்கினிக் குஞ்சொன்றை பொதிந்து வைத்துச் சென்றிருக்கிறாள் அனிதா.

வெந்துத் தணியட்டும் இந்த நாடு.

- எஸ்கேபி. கருணா






Reply · Report Post